என்னுரை
அகிலாண்ட கோடிப் பிரம்மாண்ட நாயகன் ஆறுமுக வள்ளல், அரிய பரிசுகளை அடியவர்கட்குத் தந்து கொண்டே இருக்கிறான். அவன் தரும் கொடையோ அளவிடற் பாலதன்று. நம் கைகளோ அவன் பரிசு மழையால் நிறைந்து வழிகின்றன.
பத்து வயது முதல் முருகப் பெருமான் மேல் பாடிவரும் அடியேனுக்கு அவன் பரங்கருணைப் பிரவாகத்தை ஆறுபடை வீடுகளிலும் வேறுபல அவன் கோயில்களிலும் பாடும் பேரானந்தம் தந்த பெருமான்.
1986ல் நான் மேனாள் ஒருங்கிணைந்த செங்கை மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் கோடை நகர்க் குமரனைக் கண்டு அவன் பேரழகில் இலயித்தேன்.
2003 ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் கோடை நகரில் வில்லிசை வேந்தர் கவிமாமணி சுப்பு ஆறுமுகம் பெய்த இசை மழையில் நனைந்த பல்லாயிரவர்களுள் அடியேனும் ஒருவன்.
கோடைக்குமரன் மேல் ஒரு நல்ல காவியம் இயற்ற வேண்டுமென நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் சுப்பு ஆறுமுகம் அதே வேண்டுதலை வைத்தார். உடனே சரி என்று சொல்ல வைத்தான் வேலவன். அவன் செய்கிற திருவிளையாடலில் இந்த நூலும் ஒன்று.